உண்மை நிலை
இருந்த ஒருவீடும்
இல்லாமல் போனபின்னும்
சந்தோசமாய் தான் இருக்கின்றது
உயிருடன் இருப்பதால்
நண்பனுக்கு...
சயனைடு குப்பியால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக
தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா
சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்
உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா
தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே
எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா